நிறுவனத்தின் இணையதள விமர்சனங்களை காரணம் காட்டி நேர்காணலை ரத்து செய்த நபர் ஒருவர், அதன் உரிமையாளரின் முரட்டுத்தனமான பதிலால் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
மூத்த மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த அந்த நபர், நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு நிறுவனத்தின் ஆன்லைன் விமரிசனங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு நிர்வாகம் குறித்து பதிவாகியிருந்த மோசமான கருத்துகளை பார்த்து பல எச்சரிக்கை அறிகுறிகளை அவர் உணர்ந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நிறுவனத்திற்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், தங்களது நிறுவனம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களால் தான் நேர்காணலில் கலந்துகொள்ளவில்லை என்றும், தனது விண்ணப்பத்தை ரத்து செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த நிறுவனத்தின் உரிமையாளர், “நீங்கள் என் நிறுவன குறிக்கோள்களுடன் ஒத்துப்போகவில்லை என்பதை இது காட்டுகிறது, நான் இந்த நிறுவனத்தை வாங்கி சில மாதங்கள்தான் ஆகிறது” என்று மிகவும் ஆக்ரோஷமாகவும் தற்காப்புடன் பேசியுள்ளார்.
உரிமையாளரின் இந்த முதிர்ச்சியற்ற பதிலை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், தான் ஒரு பெரிய ஆபத்தில் இருந்து தப்பிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்த ஸ்கிரீன்ஷாட்டை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர் நாகரிகமாக பதிலளித்திருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேலை தேடுவோர் நிறுவனத்தின் பின்புலத்தை ஆராய்வது எவ்வளவுக்கு முக்கியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

