ஈரான் அணு சக்தியை உற்பத்தி செய்யக்கூடாது எனக்கூறி கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்நாட்டின் மீது போரை துவங்கியது. ஈரான் அடி பணிந்துவிடும்.. அந்நாட்டில் இருக்கும் எண்ணெய் வளங்களை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா கணக்கு போட்டது. ஆனால், அமெரிக்காவே எதிர்பார்க்காதபடி ஈரான் திருப்பி தாக்கியது.
அதோடு, அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. அதோடு, ஈரான் தனது கடல்வழியான ஹோர்மூஸ் நீரிணையை மூடிவிட்டதால் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. எனவே, ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் திறக்கவில்லையென்றால் அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். ஆனால், ஈரான் அடிபணியவில்லை.
அதேநேரம் பாகிஸ்தானின் முயற்சியால் ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும் என்கிற நிபந்தனையோடு இரண்டு நாடுகளும் இரண்டு வாரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தையும் நடந்தது. ஈரான் அணுசக்தி உற்பத்தி செய்யக்கூடாது என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக இருந்ததால் ஈரான் அதை ஏற்கவில்லை. இதையஎடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. எனவே ஈரான் நாட்டின் மீது மீண்டும் அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஈரானின் கடற்படை அழிந்துவிட்டது விமானப்படை போய்விட்டது. வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகள் பயனற்றது. அணுசக்தி ஆசையினால் கமேனி மற்றும் அவர்களின் பெரும்பாலான தலைவர்கள் மரணமடைந்து விட்டனர்.. ஈரான் மீதான முற்றுகை விரைவில் தொடங்கும்.. இந்த முற்றுகையில் மற்ற நாடுகளும் ஈடுபடும்.. ஈரானில் எஞ்சியிருக்கும் மிகச் சிறிய பகுதிகளையும் அமெரிக்க ராணுவம் அழித்து முடிக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்.

