அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் நாட்டை தாக்க துவங்கியது. அந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த நிலையில் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஒருபக்கம் பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்காவுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.. ஆனால் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக்கூடாது என்கிற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் அந்த வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது அமெரிக்காவுக்கு நெருக்கடியை கொடுத்தது.
எனவே, ஹார்மூஸ் நீரினையை ஈரான் திறக்காவிட்டால் அந்த நாட்டின் முக்கிய பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார். தற்போது இரண்டு வார கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் ஈரானின் கடற்பகுதியை முற்றுகையிடும் வேலையில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.. அதோடு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் ஈரானின் பல பகுதிகளை தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்திருக்கிறார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஈரான் ‘அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கினால் மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்’ என எச்சரித்துள்ளது. வெறும் பெயரளவிலான இந்த போர் நிறுத்த காலத்தில் எதிரிகளின் நகர்வுகளை உன்னிப்பாக நாங்கள் கவனித்து வருகிறோம்.. ஏதேனும் அத்துமீறல் நடந்தால் அமெரிக்காவின் எஞ்சியுள்ள சொத்துக்கள் மீது பேரழிவுகளை உண்டாக்குவோம்’ எனவும் ஈரான் எச்சரித்திருக்கிறது. துவக்கம் முதலே அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் அடிபணிய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் ஹார்மூஸ் நீரினையை திறக்க சர்வதேச ராணுவ திட்டமிடல் மாநாட்டை நடத்தும் வேலைகள் நடந்து வருகிறது. 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டிற்கு இங்கிலாந்தும், பிரான்சும் தலைமை தாங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

