நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற அராஜக சம்பவத்திற்கு எதிராகப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் களமிறங்கியுள்ளார்.
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய ‘கறுப்பு ஆடை கும்பலுக்கு’ எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதி அமைச்சர், சட்டத்தைக் கையிலெடுத்துப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாகக் காவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதானியைத் தொடர்பு கொண்ட பிரதி அமைச்சர் பிரதீப்,தோட்டப் பகுதிக்குள் எதற்காக இவ்வாறான ஒரு கறுப்பு ஆடை கும்பல் (குண்டர் படை) உருவாக்கப்பட்டது? இந்த அராஜகச் செயலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளதுடன் என்பது குறித்து அவர் விளக்கம் கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ் தொழிலாளர்களுக்குச் சாதகமாகப் பிரதி அமைச்சர் வீடுகளை இழந்த மற்றும் தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்குத் தோட்ட நிர்வாகம் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்
அவ்வாறு இல்லையெனில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே இடத்தில் காணி வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்களை முன்வைத்துள்ளார்.
மலையகத் தோட்டப் பகுதிகளில் நிர்வாகங்கள் குண்டர் படைகளை வைத்துக்கொண்டு தொழிலாளர்களை அச்சுறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

