இயக்குநர் சுந்தர். சி, நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை இயக்குவதாக முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இதனை தயாரிப்பதாக வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், சில வாரங்களிலேயே அந்த படத்திலிருந்து தான் விலகுவதாக சுந்தர். சி அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ரஜினிகாந்துக்கும் இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்கு முக்கிய காரணம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், தேர்தலுக்கு பின் பேட்டி அளித்த சுந்தர் சி, இதற்கான உண்மையான காரணத்தை அவர் விளக்கியுள்ளார். தனக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் அல்லது தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே எந்த வருத்தமும் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தன்னுடைய பாணியிலான கதை களங்களில் மட்டுமே தன்னால் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றும், ரஜினி போன்ற ஒரு பெரிய ஆளுமையுடன் இணையும்போது ஏற்படும் அதீத எதிர்பார்ப்பை என்னால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியுமா என்கிற தயக்கம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தனித்துவமான இயக்கத்தில் சமரசம் செய்து கொள்ள விரும்பாததாலேயே, முறையாக அனுமதி பெற்று படத்திலிருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

