தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், கோலிவுட் திரையுலகம் ஸ்தம்பித்தது. ஏப்ரல் 26-ஆம் தேதி நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில், நடிகர் மற்றும் நடிகையர் வருவாய் பகிர்வு அடிப்படையில் சம்பளத்தை பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒரு நாள் போராட்டத்தால் சென்னை மற்றும் வெளிஊர்களில் நடந்து வந்த 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதில் சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி, விஷால் மற்றும் விஜய் ஆண்டனி போன்ற முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகளும் அடங்கும். இதனால் தயாரிப்பாளர்களுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தெலுங்குத் திரையுலகில் லாப நஷ்டங்களில் நடிகர்களும் இயக்குநர்களும் பங்கு கொள்கின்றனர், ஆனால் தமிழில் அந்த நடைமுறை இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகர் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் விளக்கியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு பெப்சி மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் சங்கம் தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.

