கனடாவில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சிறுவர்களைப் பாலியல் நோக்கத்திற்காக வலைவீசித் தேடி வந்த 35 வயது நபரை பீல் பிராந்திய காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் ஒன்டாரியோ மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களைச் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தவறான நோக்கத்திற்காகத் தூண்டிய அடையாளம் தெரியாத நபர் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. இந்தத் தீவிர விசாரணையின் முடிவில், ஒன்டாரியோவின் மிட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி மரியன் என்பவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் தனது உண்மையான அடையாளத்தை மறைக்க பல்வேறு பெயர்களில் சமூக வலைதளக் கணக்குகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 16-ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஸ்டான்லி மரியன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பீல் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘குற்றம் சாட்டப்பட்ட நபர் இணையம் வாயிலாக இன்னும் கூடுதலான சிறுவர்களைத் தொடர்பு கொண்டிருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின், உடனடியாக காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

