ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே மைதானத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டி முடிந்த பிறகு டிராவிஸ் ஹெட்டுக்கு கைகுலுக்க விராட் கோலி மறுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவியது. இதனால் ஆத்திரமடைந்த சில ரசிகர்கள், டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெசிகாவை ஆன்லைனில் மிகக்கொடூரமாக வசைபாடி வருகின்றனர்.
மைதானத்தில் நடக்கும் மோதல்களுக்காக, வீரர்களின் குடும்பத்தினரை இலக்காக்குவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போதும் ஜெசிகா இதேபோன்ற சைபர் தாக்குதலுக்கு உள்ளானார். இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகத்திடம் பேசிய ஜெசிகா, “விளையாட்டில் ஆக்ரோஷம் இருக்கலாம், ஆனால் அதன் பின்னால் நிஜ மனிதர்களும் அவர்களது குடும்பத்தினரும் இருக்கிறார்கள் என்பதை மறக்க கூடாது. இது போன்ற தாக்குதல்கள் மனநலனைப் பெரிதும் பாதிக்கும்” என வேதனை தெரிவித்துள்ளார்.
மைதானத்தில் நடக்கும் சுவாரசியமான சீண்டல்களைத் தாண்டி, வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவர்களது குடும்பத்தினரையும் சமூக வலைத்தளங்களில் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ஐபிஎல் ரசிகர்களின் இந்த அநாகரிக முகம் விளையாட்டு உலகினரிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

