தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக உரிமை தொடர்பான மோதல், தற்பொழுது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் அமைச்சரும் தற்போதைய மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி. சண்முகம் தரப்பினர், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலச் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பால் நியமிக்கப்பட்ட புதிய மாவட்டச் செயலாளர் பசுபதியிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்ததால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி. சண்முகத்திற்கும் இடையே கடும் பிளவு ஏற்பட்டது. அண்மையில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ்-ஐ சந்தித்து மீண்டும் ஒரே அணியாக இணைந்த போதிலும், சி.வி. சண்முகம் மட்டும் அவரை சந்திக்கச் செல்லாமல் விலகியே இருக்கிறார்.
இதற்கிடையே, தனது மயிலம் தொகுதி கிராமங்களில் திறந்த வேனில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை தொடங்கிய சி.வி. சண்முகம், “என்னை நம்பித் தேர்ந்தெடுத்த மக்களுக்கு எனது கடமையை முழுமையாக செய்வேன்; மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்களுடனேயே இருந்து தேவையான உதவிகளை செய்ய என்றும் தயாராக இருக்கிறேன்” என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
சாவியை ஒப்படைத்த போதிலும், தொகுதி மக்களுக்கான தனது அரசியல் பணியைத் தீவிரமாகத் தொடரப் போவதாக அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

