ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் உள்ள கவாகோய் நகரில் பாகிஸ்தான் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு மசூதி கட்டப்பட்டது. இருப்பினும், நகர திட்டமிடல் மற்றும் கட்டுமான விதிகளை மீறி இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதால் இந்த மசூதியை உடனடியாக இடித்து அகற்றும்படி ஜப்பான் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது பேசுபொருளாகியுள்ளது.
ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் உள்ள கவாகோய் நகரில் உள்ள இந்த மசூதியின் பெயர் ‘ஜப்பான் ஜாமே மஸ்ஜித் ரம்ஜான்’.. கவாகோய் நகரின் ஷிமோ-அகாசகா என்ற பகுதியில் இது கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் சட்டங்களின்படி முறையான கட்டிட அனுமதிகள் எதையும் பெறாமல் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த மசூதி அமைந்துள்ள நிலத்தின் உரிமையானது, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் நடத்தும் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் சமர்ப்பித்த திருத்தத் திட்டத்தில், இந்த மசூதியை இறுதியில் அகற்றிவிடுவதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2024 அக்டோபர் மாதத்தில், உள்ளூர் மக்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில்தான் இந்தச் சட்டவிரோதக் கட்டுமானம் குறித்து கவாகோய் நகர அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்வதற்குள், மசூதியின் வெளிப்புறக் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்திருந்தன.
கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அதிகாரிகள் பலமுறை நேரில் சென்று எச்சரித்த போதிலும், அதையெல்லாம் காதில் வாங்காமல் மசூதியின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.. மேலும், இந்த மசூதி ஆரம்பத்தில் முறைப்படி பதிவு செய்யப்படாததால், இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதிலும் அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்துள்ளது.

