யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து, அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்.
எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு கடந்த 31 ஆம் திகதி நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் கல்வி பயிலும் சகல இன மாணவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனுமே தமது கற்கைகைளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையில் இச் சம்பவத்தின் அடிப்படையில் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான தேவையற்ற பிரசாரங்களும் செய்திகளும் பரவிய வண்ணமுள்ளன.
அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் சுமூகமான இயக்கத்தைக் குழப்பும் வகையிலும் தமிழ் – சிங்கள மாணவர்களிடையே காணப்படும் புரிந்துணர்வைக் குழப்பும் வகையில் இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது .
மாணவர்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.
எனவே தேவையற்ற – விசமப் பிரசாரங்களினை மேற்கொள்ள வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது .

