பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான், தனது காதலி கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி மிக நெருக்கமானவர்கள் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அமீர் கான், கடந்த ஆண்டு தனது 60ஆவது பிறந்தநாளின் போது கௌரியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
கௌரி ஸ்ப்ராட் பெங்களூருவை சேர்ந்தவர். லண்டனில் ஃபேஷன் மற்றும் ஸ்டைலிங் படிப்பை முடித்துள்ள அவர், தற்போது மும்பையில் சலூன் ஒன்றை நடத்தி வருவதுடன், அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
கடந்த 18 மாதங்களாக தங்களது காதலை ஊடக வெளிச்சம் படாமல் ரகசியமாக வைத்திருந்த அமீர் கான், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “கௌரி என் வாழ்க்கையில் வந்த பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
அமீர் கான் – ரீனா தத்தா தம்பதிக்கு ஜூனைத், இரா என்ற இரு பிள்ளைகளும், கிரண் ராவ் மூலம் ஆசாத் என்ற மகனும் உள்ளனர். விவாகரத்துக்கு பிறகும் தனது முன்னாள் மனைவிகளுடன் சுமுகமான உறவை பேணி வரும் அமீர் கான், கௌரியுடன் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் அண்மை காலமாக இணைந்து பங்கேற்று வருகிறார்.

