ஹரிஷ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவான திரைப்படம் பார்க்கிங். 2023ம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் வரவேற்பை பெற்றதோடு இயக்குனருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
என்ன சோகம் எனில் படம் வெற்றி பெற்றும், தேசிய விருது கிடைத்தும் இப்போது வரை ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை. படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ராம்குமார் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே சிம்புவுடன் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கினார் ராம்குமார். அந்த படம் துவங்கவிருந்த நேரத்தில் படத்திலிருந்து பின்வாங்கி வெற்றிமாறன் படத்தில் நடிக்கப் போனார் சிம்பு. எனவே அந்த படமும் கைவிடப்பட்டது.
அதன்பின் ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதும் அந்த வாய்ப்பு ராம்குமாருக்கு கிடைத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் சிவகார்த்திகேயனிடம் பேசிவந்தார் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஆனால், அவரோ சேயோன் படத்தில் நடிக்கப் போய்விட்டார். எனஏ, என்ன செய்வதென்றே தெரியாமல் மன உளைச்சலில் இருந்த ராம்குமாரை தொடர்பு கொண்ட சிம்பு கண்டிப்பாக நாம் இணைந்து ஒரு படம் செய்வோம் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறாராம்..
சிம்பு அரசன் படத்தை முடித்துவிட்டு அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கப் போகிறார். அதை முடித்துவிட்டு ட்யூட் படத்தை இயக்கிய கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடிக்கும் வரை ராம்குமார் பாலகிருஷ்ணன் காத்திருக்க வேண்டும். எப்படியும் கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிடும் என்கிறார்கள். ஒரு ஹிட் படம் கொடுத்தும் பல இயக்குனர்கள் இப்படி நடிகர்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை கோலிவுட்டில் தொடர்ந்து வருகிறது.

