ஒன்டாரியோ மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பு முடிவுகள், முதலமைச்சர் டக் ஃபோர்டின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. இத்தகவல்கள் மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்கள் இது குறித்து செவ்வாய்க்கிழமை டக் ஃபோர்டிடம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளைக் கடுமையாகச் சாடியதுடன், அவற்றை முற்றிலும் நிராகரித்தார்.
தனது கட்சியின் உள்வட்டாரக் கருத்துக்கணிப்புகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஆய்வுகள் முற்றிலும் மாறுபட்ட மற்றும் சாதகமான முடிவுகளையே காட்டுவதாக அவர் தெரிவித்தார். இன்று தேர்தல் நடத்தப்பட்டாலும் 41 சதவீத ஆதரவுடன் தங்களது கட்சி மீண்டும் ஒரு மிகப்பெரிய பெரும்பான்மை ஆட்சியை அமைக்கும் என்று அவர் உறுதிபடக் கூறினார். பொதுவெளியில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் போலியானவை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்தக் கருத்துக்கணிப்பு முறையான வகையில் நடத்தப்படவில்லை என்று விமர்சித்த டக் ஃபோர்டு, எதிர்க்கட்சியினரான என்.டி.பி மற்றும் லிபரல் கட்சியின் ஆதரவாளர்களிடம் மட்டுமே கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக டவுன்டவுன் பகுதியில் உள்ள தீவிர என்.டி.பி ஆதரவு வட்டாரங்களில் மட்டுமே இந்த ஆய்வு சுருக்கிக் கொள்ளப்பட்டதாகவும், ஒட்டுமொத்த மாகாணத்தின் மனநிலையை இது பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், இத்தகைய ஆய்வுகளை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவது தேவையற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

