நடிகை வைஷாலி தணிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மின்சார கட்டணம் உயர்வு குறித்து வெளியிட்டுள்ள உருக்கமான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கதகளி, சர்கார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ள வைஷாலி, பின்னர் ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலமாகவும், கணவர் சத்யதேவுடன் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்.
தவெக தலைவர் விஜய் அரசியலில் களமிறங்கியது முதல் அவருக்கு தீவிர ஆதரவு தெரிவித்து வந்த இவர், தேர்தல் வெற்றியை தொடர்ந்து 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்கும் பாராட்டு தெரிவித்து விடியோ வெளியிட்டிருந்தார்.
ஆனால், தற்போது கடந்த சில மாதங்களாக தாங்க முடியாத அளவுக்கு மின்சார கட்டணம் அதிகரித்து வருவதாக கூறி அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். முன்பு வெளியிட்ட 200 யூனிட் இலவச மின்சார ஆதரவு விடியோவுக்காக மன்னிப்பு கோரியுள்ள அவர், தவெக தரப்பில் தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்டவை எதும் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதே நிலை தொடர்ந்தால் எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய முறையிலேயே கணக்கீடு செய்வதே சிறந்தது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரசின் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் ஆட்சியின் மீதான நம்பிக்கையை குலைக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

