பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் போராடி வருகிறார்கள். திமுக ஆட்சியிலும் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களை பலரை கைது செய்தும் சிறையில் அடைத்தனர்.
தற்போது விஜய் முதலமைச்சராகியுள்ள நிலையில் அவரை சந்திக்க நேரம் கேட்டு தூய்மை பணியாளர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக போராடி வருகிறார்கள். இன்று சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடம் அருகில் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், நிர்மல் குமார், ராஜ் மோகன் ஆகியோர் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..
அப்போது அவர்கள் முன்பு பேசிய அமைச்சர் ஆனந்த் ‘நீங்கள் போராட்டம் நடத்தினால் கடந்த ஆட்சியில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.. ஆனால் முதல்வர் விஜய் அப்படி இல்லை.. அவர்கள் கஜானாவை சுத்தம் செய்துவிட்டு சென்றுவிட்டனர்.. கஜானா மட்டும்தான் இருக்கிறது.. நாங்கள் அதை சரி செய்து கொண்டிருக்கிறோம்.. உங்களுக்கு தேவையான கோரிக்கைகளை முதல்வரின் உத்தரவின் பேரில் நிறைவேற்றி தருவோம்..
நீங்கள் இப்படி போராட்டம் நடத்த வேண்டாம்.. உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென முதல்வர் விஜய் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.. நீங்கள் போராடுவதால் அவர் சரியாக கூட தூங்குவதில்லை.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் வந்து பேசலாம்.. எங்கள் கதவுக்ள் உங்களுக்காக திறந்து இருக்கிறது.. எனவே போராட்டத்தை கை விடுங்கள்’ என பேசினார். அதேபோல் மற்ற அமைச்சர்கள் பேசும்போதும் ‘இது உங்களுடைய அரசு.. உங்கள் அண்ணன்தான் முதல்வராக இருக்கிறார்.. உங்களுக்கு செய்யாமல் யாருக்கு செய்யப் போகிறார்.. உங்களுக்கு தேவையானதை நிச்சயம் விரைவில் செய்து கொடுப்பார்… கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’ என அவர்களை சமாதானம் செய்தனர்.

