மலையாளத் திரையுலகின் பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணியான மோகன்லால் – ஜீத்து ஜோசப் இணைப்பில் உருவான திரிஷ்யம் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், நேற்று வெளியான திரிஷ்யம் 3 மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டது. ஆனால், படம் பார்த்த ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளன.
இந்நிலையில், தனது அதிரடி விமர்சனங்களால் எப்போதும் பரபரப்பை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன், திரிஷ்யம் 3 படத்தையும் விட்டுவைக்கவில்லை. தனது யூடியூப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள விமர்சனம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முதல் பாகத்தில் சினிமா அறிவை வைத்து கொலையை மறைத்த ஜார்ஜ் குட்டி, இரண்டாம் பாகத்தில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முன்கூட்டியே ஸ்கெட்ச் போட்டார். இந்த 3-ம் பாகத்தில், ஜார்ஜ் குட்டி ஒரு பெரிய பணக்காரராகவும், தான் எழுதிய கதையை படமாக எடுத்து வெற்றி கண்ட தயாரிப்பாளராகவும் காட்டப்படுகிறார். தன் மகளுக்குத் திருமணம் செய்ய முயற்சிக்கும்போது, யாரோ ஒரு மர்ம நபர் அதைத் தடுத்துக்கொண்டே இருக்கிறார். அந்தச் சதிக்குப் பின்னால் இருப்பது யார்? ஜார்ஜ் குட்டி மீண்டும் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தைப் பற்றி மாறன் கூறுகையில், திரைக்கதை முதல் இரண்டு மணி நேரம் பொங்கல் சாப்பிட்டது போல மந்தமாக நகர்கிறது. கடைசி 30 நிமிடங்கள் மட்டுமே ஓரளவுக்குத் தேறுகிறது. முதல் இரண்டு பாகங்களில் இருந்த அந்த விறுவிறுப்பு இதில் சுத்தமாக இல்லை எனத் தெரிவித்தார்.
ஜார்ஜ் குட்டிக்கு எதிராக ஆதாரம் திரட்டச் செல்லும் ஒவ்வொரு தகவலும் அவருக்கு உடனே தெரிந்துவிடுவது திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.முந்தைய பாகங்களில் ஆஷா சரத் கதாபாத்திரம் மிரட்டியது. இதில் சித்திக் கதாபாத்திரம் மொசாட் ரேஞ்சுக்கு பிளான் செய்தாலும், அவை எதுவுமே எடுபடாமல் மொக்கையாக உள்ளது.
இதில் படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான குறியீட்டை வேறு வைத்துள்ளார்கள். சரக்கு தீர்ந்து போச்சு, இதோடு கடையை மூடினால் நல்லது என தனது வழக்கமான நக்கலில் கூறியுள்ளார் மாறன்.

