இந்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் இருந்த சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்பனை செய்ததாக வெளியான தகவல்களை முற்றிலும் தவறு, அது ‘போலியானது’ என்று விளக்கம் அளித்துள்ளது.
புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றின் அடிப்படையில் இத்தகைய வதந்திகள் பரவ தொடங்கின.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசின்PIB Fact Check மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை இணைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் கையிருப்பு 880.52 டன்னாக எவ்வித மாற்றமுமின்றி அப்படியே நீடிக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மற்றும் மாற்று விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவே அதன் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றனவே தவிர, தங்கம் எதுவும் விற்கப்படவில்லை என்று வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்களிப்பு கடந்த மே 22 நிலவரப்படி 16.85 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.
எனவே, பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்பாமல் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கம் விற்பனை குறித்த தேவையற்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

