மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் சர்வதேச விநியோக சங்கிலி பாதிப்பு காரணமாக, இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஜூன் 11, அன்று ஒரு புதிய தற்காலிக உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் போன்ற மொத்த நுகர்வோர் சில்லறை பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
டெல்லியில் சில்லறை விற்பனையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.95.20-க்கு விற்கப்படும் வேளையில், மொத்த நுகர்வோருக்கு அது ரூ.134.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வித்தியாசத்தால், பொதுமக்களுக்கான சில்லறை பங்குகளில் நிறுவனங்கள் அதிகளவில் டீசல் வாங்கியதால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இதனைத் தடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, நிறுவனங்கள் தங்கள் சொந்த நுகர்வோர் பம்புகள் மூலமாகவே எரிபொருளைப் பெற வேண்டும். மேலும், சில்லறை பங்குகளில் வாகனங்களின் எரிபொருள் தொட்டி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படும்;
இதனை மறுவிற்பனை செய்யக் கூடாது. இந்த கட்டுப்பாடுகள் ஆரம்பகட்டமாக 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். விதிகளை மீறுபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

