கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ரொரன்றோவில் உள்ள இந்திய தூதரகம் மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சமீபகாலமாக கனடாவில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் இந்தியர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களைக் கருத்திற்கொண்டு இந்திய தூதரகம் இந்த அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனடாவில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக அங்கு கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளுக்குச் செல்லும்போது அதிகபட்ச கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நீர்நிலைகளின் ஆழம் மற்றும் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் அவற்றில் இறங்குவது ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, தெரியாத அல்லது பாதுகாப்பற்ற இடங்களுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைபிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள தூதரகம், Life Jackets அணிய அறிவுறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அவற்றை கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும் என இந்தியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

