மிசிசாகாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணி அளவில் நிகழ்ந்த கோரமான விபத்தில் 38 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். எரின் மில்ஸ் பார்க்வே மற்றும் எக்லிண்டன் அவென்யூ மேற்கு சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த வெள்ளை நிற மெர்சிடிஸ் செடான் ரக கார் ஒன்று, சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றது.
பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இந்த விபத்தின் போது காரின் முன்பகுதி மற்றும் கண்ணாடியில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது போன்ற சேதங்களுடன் வரும் வாகனங்கள் குறித்து தகவல் அளிக்குமாறு கார் பழுதுபார்க்கும் நிலையங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கான்ஸ்டபிள் டைலர் பெல்-மொரினா, காவல்துறையினரிடம் போதுமான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், குற்றவாளியைக் கண்டறிவது காலத்தின் கட்டாயம் என்றும் கூறினார். ஒரு மனிதர் மீது மோதியது தெரிந்தும் ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் உடனடியாக வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு சரணடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

