உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற ‘மாணவர் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வன்முறை மற்றும் வெறுப்புணர்வை விட்டுவிட்டு அன்புடனும் பாசத்துடனும் இந்த அமைப்பை மாற்ற வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நாட்டின் பல கோடிகளை செலவழித்து படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்றும், வினாத்தாள் கசிவு மற்றும் போதிய வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் இன்றைய இளைய சமுதாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இளைஞர்களின் தரவுகள் அனைத்தும் ஜியோ, அதானி போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுவதாகவும், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கடிக்கப்பட்டுவிட்டு பிளிங்கிட், உபர் போன்ற நிறுவனங்களில் டெலிவரி வேலை செய்யவோ அல்லது கூலி வேலை செய்யவோ தள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் 40 கோடி இளைஞர்களும் அவர்களது தரவுமே 21-ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தி என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, உற்பத்தி துறை சரிவு, கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளன என்று தெரிவித்தார்.
டெல்லியில் மாணவர் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவங்களை குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் தங்களது உரிமைகளுக்காக பயமின்றி அமைதியான முறையில் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

