டெல்லியின் லஜ்பத் நகர் பகுதியில் ‘கேரிமென்’ என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று, ஒரு மணி நேரத்திற்கு 149 ரூபாய் கட்டணத்தில் ஷாப்பிங் பைகளை சுமக்கவும், வரிசையில் நிற்கவும் உதவியாளர்களை நியமிக்கும் சேவையை தொடங்கியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், அதே நேரத்தில் நகைச்சுவையான கருத்துகளையும் கிளப்பியுள்ளது.
ஷாப்பிங் செய்யும்போது பைகளை சுமப்பது முதல், உணவகங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பது வரை இந்த உதவியாளர்கள் பணிபுரிவார்கள் என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த சேவையை பலரும் ஆச்சரியமாக பார்த்தாலும், நெட்டிசன்கள் இதனை நகைச்சுவையாகவே அணுகுகின்றனர்.
“இது கணவர்களின் வேலைதானே?”, “அம்மாவிடம் இந்த சேவையை பற்றி சொல்லிவிடாதீர்கள், என்னை மாற்றிவிட்டு இவர்களை வேலைக்கு வைத்துவிடுவார்கள்” என சமூக வலைதளங்களில் பல கலகலப்பான கருத்துகள் பகிரப்படுகின்றன. அதேநேரம், நெரிசலான சந்தைகளில் இது போன்ற சேவைகள் அவசியமான ஒன்று என்றும், இது நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான தொழில்முனைவு என்றும் ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இத்தகைய சேவைகள் குறைந்த கூலி உழைப்பை சார்ந்திருப்பதாகவும், இது தேவையில்லாத ஒரு ஆடம்பர சேவை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன. என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பெருநகரங்களில் ‘வசதி’ என்பது ஒரு பிரீமியம் பொருளாக மாறி வருகிறது என்பதற்கு இச்சேவை ஒரு சிறந்த உதாரணம். வேகமாக இயங்கும் நகர வாழ்க்கையில், இது போன்ற ஹைப்பர்லோக்கல் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ளது.

