நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து ரஜினி ஓய்வில் இருக்கிறார். நேற்று கூட அவர் ஊட்டிக்கு சென்றார், ஒருபக்கம், ரஜினியின் சுயசரிதையும் எழுதப்பட்டு வருகிறது.
ஒருபக்கம் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து என்பது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்திதான் ரஜினியின் புதிய படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்திலிருந்து வெளியேறிவிட அஸ்வத் மாரிமுத்து உள்ளே வந்திருக்கிறார்.
அஸ்வத் போன்ற இளம் இயக்குனருடன் ரஜினி கூட்டணி அமைக்கப் போவது ரஜினி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருபக்கம் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனர் மிஷ்கினை நடிக்க வேண்டும் என அஸ்வத் மாரிமுத்து ஆசைப்படுகிறாராம்.
ஏனெனில், அஸ்வத் இயக்கிய டிராகன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மிஷ்கின் நடித்திருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட். அந்த செண்டிமெண்ட் காரணமாகவே ரஜினி படத்திலும் மிஷ்கினை நடிக்க வைக்கும் முயற்சியில் அஸ்வத் இறங்கியிருக்கிறாராம். மிஷ்கின் தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவருக்கும் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும் என்பதால் கண்டிப்பாக ரஜினியின் புதிய படத்தில் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

