ஐபிஎல் தொடரில் அணிகளின் உரிமையாளர்கள் ப்ளேயிங் லெவன் தேர்வில் தலையிடுகிறார்களா என்ற நீண்ட நாள் விவாதத்திற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். 2026 ஐபிஎல் சீசனில் தனக்கு இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஒரு பாட்காஸ்ட்டில் பேசிய இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் லிவிங்ஸ்டோன், ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் போட்டிபோட்டு அதிக தொகைக்கு வாங்கப்பட்ட சலில் அரோரா என்ற இளம் வீரரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர்கள் மிகவும் விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் அணியில் விளையாடுவது முன்பே உறுதி செய்யப்பட்டுவிட்டது. கேப்டன் கம்மின்ஸ் இல்லாத போட்டிகளில் கூட, அணியில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடம் காலியாக இருந்தும் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியிடம் கேட்டபோது, உரிமையாளர்களின் விருப்பமே இதற்கு காரணம் என அவர் வெளிப்படையாக கூறிவிட்டதாக லிவிங்ஸ்டோன் அம்பலப்படுத்தியுள்ளார். உரிமையாளர்களுக்கு கிரிக்கெட்டில் என்ன நிபுணத்துவம் இருக்கிறது என முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், காவ்யா மாறன் இணை உரிமையாளராக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகத்தின் மீதான இந்த குற்றச்சாட்டு ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

