1996ம் வருடம் பாட்ஷா பட விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி பேசிய போது அவர் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் வரவில்லை. மாறாக திமுகவுக்கு ஆதரவு கொடுத்து அந்த கட்சியை வெற்றி பெற வைத்தார்.
அதன்பின் தொடர்ந்து தனது திரைப்படங்களில் அரசியல் தொடர்பான வசனங்களை வைத்தார் ரஜினி. மேலும் நான் அரசியலுக்கு வரவேண்டுமா என்பதை காலமும், கடவுளும்தான் முடிவு செய்வார்கள் என தொடர்ந்து சொல்லி வந்தார். ஒரு கட்டத்தில் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி கொரோனா காலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதிலிருந்து பின் வாங்கினார். இது அவரின் ரசிகர்களை ஏமாற்றியது.
இந்நிலையில், தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் ‘அரசியலுக்கு வரவில்லை என ரஜினி சார் அறிவித்த சமயம் நான் அவரை வீட்டில் சென்று சந்தித்தேன். அப்போது ‘உடம்பு முடியல கண்ணா.. என்னை வாழ வச்ச இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன்.. ஆனா முடியல.. உள்ளே குத்துது.. ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்று என்னிடம் மிகவும் சோகத்தோடு பேசினார்’ என ராகவா லாரன்ஸ் சொல்லியிருக்கிறார்.

