சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக, முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி தனது தசைப்பிடிப்பு காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விளையாட தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இன்று சென்னையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் அவர் களமிறங்குவாரா என்பதில் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது.
தோனி தற்போது 100% உடல் தகுதியுடன் இருந்தாலும், அணியின் தற்போதைய வெற்றி கூட்டணியை கலைக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, தோனி இல்லாத நேரத்தில் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்றுள்ள சஞ்சு சாம்சன், பேட்டிங்கில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தலான ஃபார்மில் உள்ளார். இதனால் ஒரு இளம் வீரரின் இடத்தை பறிக்க தோனி தயங்குவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் மைக் ஹசி ஆகியோர் தோனியின் முன்னேற்றம் குறித்து நேர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். வலையில் தோனி சிறப்பாக பேட்டிங் செய்தாலும், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் இருந்த சிரமமே அவரது வருகையை தாமதப்படுத்தியது.
சிஎஸ்கே அணி இந்த சீசனின் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும், கடந்த நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று பலமாக உள்ளது. தோனி மீண்டும் அணிக்கு திரும்பினால், அவர் விக்கெட் கீப்பிங் பொறுப்பை ஏற்பார் என்பதை மைக் ஹசி உறுதிப்படுத்தியுள்ளார்.

