காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதை தொடர்ந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக பின்பற்றவில்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த தண்ணீர் திறப்பு வந்துள்ளது.
கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணியில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீரும் என மொத்தம் 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணைகளின் நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

